Friday, January 29, 2010

கரட்டாண்டி


சுள்ளென்று கண்கூசும் மதிய வெயில்

இயக்கங்களை முடக்கி கானல்நீராய் ஓட
பட்ட மரக்கிளையொன்றில் அரைக்கண்
நித்திரையிலிருக்கிறது அந்தக் கரட்டாண்டி

கிளை இலைகளின் நிழல் நகர்ந்தபின்னும்
வெயில் உறைக்காது அசைவின்றி
இருக்கிறது கரட்டாண்டி

கரட்டாண்டியாய் பிறந்திருந்தால்
எப்படியிருக்கும் என
அசை போடுகிறது மனது
அவ்வளவாய் பசிக்காதோ?

நிழல் தேடி நகருமுன் சிறு
கல்லெறிந்து பார்த்தேன்
கரட்டாண்டி பயமின்றி இருந்தது

தேவைகள் ஜீவாதாரங்களோடு மட்டும்
நிற்காததால் கரட்டாண்டிபோல்
ஓரிடத்தில் நிற்க முடியாத வாழ்வு
சிங்கம்போல் பிடரி சிலிர்த்து
உறும வேண்டிய வேளைகளில் கூட
கரட்டாண்டியாய் அசைவற்றிருக்க
வேண்டியதாகிவிடுகிறது

முரண்களுடன் ஓடத் தேவையற்ற
கரட்டாண்டி அதிர்ஷ்டசாலிதான்!

***