கல்

கலகலப்பான படித்துறைகளில்
அறையப்படும் ஆடைகள்
நுரை தள்ளுகின்றன
கரங்கள் நீரை விளாவ
கண்களின் நோட்டம்
கலங்கியிருக்கிறது நீர்
ஆற்றின் நடுவே மேடுதட்டி
சூரியனிடம் பேசுகிறது மணல்
அவ்வப்போது கடந்துசெல்லும்
வெங்காயத் தாமரைக் கூட்டமும்
கிழிந்த ஆடைகளும்
அக்கரையில் மசமசப்பாக
மக்கள் கூட்டம்
கானல்நீரின் பின்புறம்
காட்சி நெளிகிறது
கால்களை முத்தமிடும்
மீன்கள்
மேலிருந்து சொருக்கடிக்கும்
பையன்கள்
துண்டை விரித்து மீன்பிடிக்கும்
சிறுமிகள்
கொக்குகள் போட்ட
மீன்கூடுகளைக் கொத்தும்
காகங்கள்
மணற் குழிகளில்
வெந்நீரில் தவிக்கும்
மீன்குஞ்சுகள்
எல்லா இயக்கங்களையும்
பார்த்துக்கொண்டு அமைதியாக
நீரைக்கிழித்து நிற்கிறது
துருத்திக்கொண்டிருக்கும்
அந்தக் கல்!


