பாலம்
நேற்றும் நல்ல மழை பெய்தபோதும்
கற்குவியலும் பாறைகளும்
முற்புதர்களும் நீர்த்தொட்டிகளும்
குழந்தைகளும் ஆண்களும் பெண்களும்
கொடிகளில் வண்ண ஆடைகளும்
கழுதைகளும் நாய்களும் பன்றிகளும்
ஓரிரு லாரிகளும் மாட்டுவண்டிகளும்
மனிதக் கழிவுகளும் குப்பைகளும்
நிரம்பியிருக்க
இடமில்லாமல் நரம்பு போல
சீரற்று கற்றையாய் ஓரமாய்
தங்கித் திணறி ஓடுகிறது
மழைநீர்
போனவருடம்வரை கூட
மணல் நிறைந்திருந்ததைப்
பார்த்த ஞாபகம்
பாலத்திருந்து பார்த்தால்
நதியின் அடையாளங்கள்
எதுவமற்று ஊர் போலவே
காட்சியளிக்கிறது
வைகையூர் என்று பலகை
மாட்டாதது மட்டும் பாக்கி
மேம்பாலத்திற்குக் கீழே
தரைப்பாலமொன்று
சுட்டெரிக்கிறது வெயில்
உச்சியிலும் உள்ளங்காலிலும்
சூடு தகிக்க நடக்கத் துவங்கினேன்
பாலங்களின் கேலிச் சிரிப்புகள்
முதுகில் தகிக்கத் துவங்கின
***



0 comments:
Post a Comment