Sunday, October 09, 2011

அலகிலாக் காதல்



உன் என நினைக்குமுன்னே
உள்ளில் நிகழும் நெகிழ்வையும்
என் எனச் சொல்லுமுன்னே
என்னில் நீ நிறைவதையும்
எனக்கெல்லாம் நீயே என்பதை
எவ்வார்த்தையும் சிக்காதிருந்தும்
யாருஞ் சொல்லாச் சிற்பமாய்
வடித்திடத் துடிக்கிறதென் நெஞ்சு

வயிற்றிலெப்போதும் பறக்கும்
பேசாப் பட்டாம் பூச்சிகளின்
தவிப்பினைத் தூவும் இச்சிறு
வரிகளின் நிழலில் ஆவேசமாயுன்
வருகைக்காகக் காத்திருக்கிறதென்
அலகிலாக் காதல்

Friday, October 07, 2011

இரவுப் பறவை



அலுமினியப் பறவையில் ஆகாசத்தில் பறக்கையில்
அடியில் கலைந்து கிடக்கின்றன மேகங்கள்
அழுது சிவந்திருக்கும் கீழ்வானத்தைத் தேற்றிவிட்டுத்
தொலைந்த சூரியனைத் தேடும் நட்சத்திரங்கள்
வெட்டியெறிந்த நகம்போல் ஓரமாய்த் தொங்கும் நிலா
விழுந்து சிதறிய வைரக்கற்கள் போன்று
கொத்துக் கொத்தாய் கடந்து போகின்றன ஊர்கள்
சலனமற்றதாய்த் தோன்றும் கடற்பரப்பில்
ஒளிப்பிம்பம் பரப்பி நகரும் கப்பல்கள்
அவசரமாய் கூடுதிரும்புகின்றன நிழற் பறவைகள்
மோனத்தில் நித்திரையில் பயணிகள்
சன்னலூடே விழிகள் வெறித்திருக்க
எண்ணங்களூடே விழித்திருக்கிறது மனம்